படியுங்கள்

எம்ஜிஆர் பரிசளித்த கேமரா விடியலில் கை மாறியது
-----
 எம்ஜிஆர், கேமரா கோண நுட்பங்களில் நிபுணர். எந்த கோணத்தில் இருந்து எப்படிப் படம் எடுத்தால் தனது முகம் எடுப்பாகவும், மிடுக்காகவும் இருக்கும் என்பதை அவர் நன்றாக அறிந்து வைத்திருந்தார். அதற்கு ஏற்ற வகையில் படம் எடுப்பவர்களை மட்டுமே அவர் அனுமதிப்பார். மேடையில் அவ எத்தகைய யோசனைக்குள் இருந்தாலும், படம் எடுப்போர் மீது நோட்டம் விட்டுக் கொண்டே இருப்பார். எங்கு நின்று எப்படிப்பட்ட கோணத்தில் படம் எடுத்தால்  தன் முகம் வயோதிகமாகவும், வாட்டமாகவும் தெரியும் என்பது அவருக்கு அத்துபடி. 
     அந்த இடத்தில் இருந்து யாரேனும் படம் எடுப்பதாக அவருக்குத் தெரிந்தால், உதவியாளரை அழைப்பார். உரிய முறையில் சமிக்ஞை செய்வார்.
  உடனே அந்த உதவியாளர் புகைப்படக்காரரை அணுகி, நயமாகப் பேசி, அடுத்த அறைக்கு அழைத்துச் செல்வார். கேமரா ரோல்  கழட்டிவிட்டு, அதற்கான பணத்தைக் கொடுத்து விட்டு  வருவார். இவை எம்ஜிஆர் விழாக்களில் அவ்வப்போது  நடக்கின்ற சம்பவங்கள் ஆகும்.
   தன் புகைப்படங்கள் வசீகரமாகவும், வனப்போடும் இருக்க வேண்டும் என்பதில் எம்ஜிஆர் கவனமாக இருப்பார். அத்தகைய கோணங்களில் படம் எடுக்கும் புகைப்படக்காரர்களை அவர் மிகவும் விரும்புவார்.   
   இத்தகையோருள் முக்கியமான பிரபல புகைப்படக்காரர் நாகராஜ ராவ். எம்ஜிஆரின் சினிமா படங்களில் டைட்டில் கார்டுகளில் அவரின் பெயரைப் பார்க்க முடியும்.
அவர்தான் எம்ஜிஆருக்கு தனிப்பட்ட முறையிலான படங்களை எடுத்துத் தருவார்.
   அப்போது அவரிடம் பழைய கேமராக்கள் மட்டுமே இருந்தன. அவற்றில் இருந்து படங்கள் எடுத்தால் போதிய அளவுக்காக ரிசல்ட் கிடைக்காது என்று எம்ஜிஆர் கருதினார்.
   எனவே அயல் நாட்டில் இருந்து வரவழைத்திருந்த நவீனமும் உயர் ரக நுட்பமும் மிக்க கேமராவை எம்ஜிஆர் வாங்கி வைத்திருந்தார். அந்த கேமராவை அவர் நாகராஜ ராவுக்குப் பரிசளித்தார். இந்த கேமராவிலேயே தன்னை படம் எடுக்கும்படி எம்ஜிஆர் கேட்டுக் கொண்டார்.
   இவ்வாறாக எம்ஜிஆரின் பரிசுப் பொருளாக, அந்த கேமராவைப் பாதுகாத்து வைத்திருந்தார் ராவ்.   
    அவரின் மறைவுக்குப் பிறகு, அந்த கேமராவின் மீதான மதிப்பும், மரியாதையும் குறைந்துவிட்டது. மேலும் மேலும் நவீனத்துவம் மிக்க கேமராக்களும் சந்தைக்கு வந்து விட்டன. என்னதான் பழைய கேமரா என்றாலும் எம்ஜிஆரின் பரிசளிப்பு என்ற வகையில் அதற்குத் தனி மகத்துவம் இருந்தது. ஆனால் அது நாகராஜ ராவின் வாரிசுகளுக்குப் புரியவில்லை.
    நாகராஜ ராவ் உயிரோடு இருந்த காலகட்டத்தில் அவரிடம் அந்த கேமராவை விலைக்கு கேட்டுக் கொண்டே இருந்தார் கேமரா சேகர். கேமரா முதன் முதலில் கண்டு பிடிக்கப்பட்ட காலத்தில் இருந்து நவீன யுகம் வரையிலான அனைத்து கேமராக்களையும் தேடித் தேடி வாங்கி, மியூசியத்தை தன் இல்லத்தில் வைத்திருப்பவர் தான் சேகர். பத்திரிக்கையாளர்களின் கேமராக்களை, அதுவும் நவீனத்துவம் மிக்கவற்றைத் தெளிவாகப் பழுது பார்த்துத் தரக்கூடியவர் சேகர். 
    நாகராஜ ராவோ கேமராவை சேகருக்குத் தர மறுத்துவிட்டார். எம்ஜிஆர் கொடுத்த பரிசுப் பொருளை இழக்க யாருக்குத்தான் மனம் வரும்?
 ஆனாலும் சேகர் கேமராவை வாங்குவதற்கான முனைப்பில் இருந்து கொண்டே இருந்தார். இந்த நிலையில் நாகராஜராவ் மறைவு எய்தினார்.
  அதன் பின்னர் ஒரு நாள் ஹிந்து நாளிதழில் ஒரு விளம்பரம் வந்திருந்தது. நாகராஜ ராவ் பயன்படுத்தி வந்த கேமராவை விற்பனை செய்வதாக அந்த விளம்பரம் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த விளம்பரத்தைப் பார்த்த சேகர், உடனடியாக ஓடிச் சென்று, ராவ் வாரிசுகளில் ஒருவரிடமிருந்து, அந்த கேமராவை லட்சக் கணக்கான ரூபாய் கொடுத்து, விலைக்கு வாங்கி வந்து விட்டார். இன்னும் அந்த கேமரா, சேகர் வசம் பத்திரமாக, சித்தாந்தச் சித்திரமாகக் கொலுவிருந்து வருகிறது.
  கேமரா கவிதை நாயகனான சேகர், மற்றொரு வகையில் உலகப் புகழ் பெற்றவர். கடந்த 2004 ஆம் ஆண்டு தமிழகக் கடற்கரைப் பகுதிகளில் தாக்குதல் நடத்திய சுனாமி வீச்சின் பின்னர், மூன்று நாட்களில் ஒரு ஜோடி கிளிகள் சேகரின் வீட்டு மொட்டை மாடியில் தற்செயலாக அதுவும் நற்செயலாக அமர்ந்தன. அப்போது உணவாடிக் கொண்டிருந்த சேகர், அந்த கிளிகளுக்கும் சோறு வைத்தார். அவை கொத்தித் தின்றுப் பாய்ந்து பறந்து போயின.
  மறுநாள் அதே நேரம், நான்கு கிளிகள் வந்தன. அவற்றுக்கும் உணவுவிட்டார். அவை உண்டு மீண்டன. இவ்வாறாக அடுத்த இரு வாரங்களுக்குள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிளிகள் தேடி, சேகரின் வீட்டில் முகாமிடத் தொடங்கின.
மொட்டை மாடியில் அமர்ந்து உணவாடக்கூடிய வகையில் காலையில் 6 மணிக்குள் ஒரு முறையும், மாலையில் 5 மணிக்குள் மறுமுறையுமாக இரண்டு முறை உணவை வைத்தார்.
  கிளிகள் உண்ணும் உணவு, செரிமானப் பிரச்சனையைத் தந்து விடக்கூடாது என்ற தாயுள்ளம் சேகருக்கு ஏற்பட்டது. எனவே அவர் அரிசி மூட்டைகளை வாங்கி, இரவிலேயே தண்ணீரில் ஊறப் போட்டு விடுவார். தண்ணீரில் குளிக்கும் அரிசி மென்மையுற்று இருக்கும். இந்த அரிசியைத் தான் குவியலாக அடுக்கி வைப்பார். அவர் அடுக்கும் போதே கிளிகள் வந்து அமர்ந்து, உண்ணத் தொடங்கும். அவரின் தோளில் அமர்ந்து கூட விளையாடும்.
 ஒரு காலகட்டத்திற்குப் பிறகு கிளிகளின் காவலனாகவே மாறினார் சேகர். அவரின் தோள்களில்   கிளிகள் களிநடம் புரியத் தொடங்கின.
  கடந்த 2024 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து தொய்வின்றி  ஒரு நாளும், ஒரு வேளையும் விடுபடாத வண்ணம் கிளிகளுக்கு உணவு வழங்கி வந்தார்.
  ஆனால் அந்தோ...
அந்த வீட்டின் உரிமையாளர், காசுக்கு ஆசைப்பட்டு, உலகப் புகழ் பெற்ற கிளிகள் உணவகத்தையே கலைத்துவிட்டார்.
        உலக வருகையாளர்களின் கவனத்தைக் கவர்ந்த கிளிகள் உணவகம் குலைந்து போயிற்று.
   பசிக்குப் புசிக்க உணவைத் தேடி வந்த கிளிகளுக்குச் சேகர் அடைக்கலம் தந்து வந்தார். ஆனால் வீட்டு உரிமையாளர் அதை வேறு நபர்களுக்கு வாடகைக்கு விட்டுவிட்டார்.
   bird sekar என்று கிளிக் செய்தால் youtube- இல், கிளிகள் உணவகம் தொடர்பான வீடியோக்கள் இருக்கக் காணலாம். பிபிசி முதற்கொண்டு உலகத் தொலைக்காட்சிகள் எல்லாம் கிளிகள் உணவகத்தைப் படம் பிடித்து எல்லா நாடுகளிலும், அனைத்து மொழிகளிலும் ஒளிபரப்பின. இது தொடர்பாக என்னிடம் (நூருல்லா) கூட பேட்டி எடுத்து ஒளிபரப்பி இருக்கிறார்கள்.
 ஆனால் அவற்றை இப்போது இழந்து நிற்கிறோம்.
சேகரோ நொறுங்கிப் போனார்.
 
-ஆர் நூருல்லா 
செய்தியாளன்
96555786

நடு ரோட்டில் நடந்த கலைஞர்
------------------
ஓடிச் சென்று அழைத்த  
எம்ஜிஆர்
--------------------
 வி வி கிரி மறைவின்போது  திடீர் சந்திப்பு
---------------------

 காங்கிரஸ் கட்சியானது, தேசிய அளவில் சிண்டிகேட்' இன்டிகேட் என இரு பெரும் பிளவாக வெடித்துப் பிரிவதற்கு மூல காரணமாக இருந்தவர் வி வி கிரி. மூளை காரணமாக இருந்தவர் இந்திரா காந்தி. 
   ஜனாதிபதி        பதவிக்கான தேர்தலின் போது காங்கிரஸ் கட்சி சஞ்சீவ ரெட்டியைக் களமிறக்கியது. ஆனால் அப்போது இந்திரா காந்தி அந்த வேட்பாளரை விரும்பவில்லை. தனது ஆட்சி முறைகளுக்கு அவர் முட்டுக்கட்டையாக இருப்பார் என்று சந்தேகம் கொண்டார். ரெட்டி ஜனாதிபதியானால், காங்கிரஸ் கட்சியின் உயர் மட்டத் தலைவர்கள் இடையே செல்வாக்குப் பெருகி, முழுக்க முழுக்க தனது தலைமைக்கு எதிராக, அவர்கள் போர்க்கொடி தூக்கி விடுவார்களோ என்று இந்திரா காந்தி பயந்தார்.
    எனவே அவர் நீலம் சஞ்சீவரெட்டியை  எதிர்த்து ஒரு போட்டி வேட்பாளரைக் களம் இறக்கினார். அவர்தான் வி வி கிரி. 
  ஜாகிர் உசேன் நமது நாட்டின் ஜனாதிபதியாக  இருந்த போது, துணை ஜனாதிபதியாக இருந்தவர் விவி கிரி. அவர் இந்திரா காந்தியுடன் இணக்கமாகவும், விசுவாசமாகவும்  நடந்து கொண்டார். எனவே தான் அவரையே ஜனாதிபதியாகக் கொண்டு வருவது என்று இந்திராகாந்தி தீர்மானித்தார்.  
     தமிழக வாழ்விடத்தைக் கொண்ட வி வி கிரியின் தேர்தல் களமாடலில் அவரே வென்றார். ஜனாதிபதி ஆனார். இந்திரா காந்தியின் பகிரங்கப் பிரச்சாரத்தின் காரணமாக, விவி கிரி வாகை சூடினார். 
        "மனசாட்சிப்படி ஓட்டு போடுங்கள்" என்று காங்கிரஸ் எம்பி, எம்எல்ஏக்களுக்கு இந்திரா காந்தி வேண்டுகோள் விடுத்ததை அடுத்து,  அது தேசிய அளவில் சர்ச்சைக்கு வித்திட்டது. கட்சியோ வெடித்துச் சிதறியது.
காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வமான வேட்பாளரை எதிர்த்து, காங்கிரஸ் அமைச்சரவையை நடத்தி வந்த இந்திரா காந்தியே குறுக்குச் சால் ஓட்டியது வரலாறு சந்தித்த விபரீதம்.
   விவி கிரி ஜனாதிபதியானால், தன் கட்டுப்பாட்டுக்குள் இருப்பார், தான் சொல்வதைக் கேட்பார் என்று இந்திரா காந்தி முழுமையாக நம்பினார். அந்த நம்பிக்கைக்குப் பாத்திரமானவராகவே விவி கிரி தனது பதவிக்காலத்தில் செயல்பட்டார்.
      இது தொடர்பான நையாண்டிச் சொல்லாடல் ஒன்றை துக்ளக் ஆசிரியர் சோ தனது பத்திரிக்கையில் பிரசுரம் செய்ததை இங்கே சுட்டிக் காட்டலாம்.
  அந்த கால கட்டத்தில் துக்ளக் இதழின் அட்டைப் படத்தில் ஒரு கார்ட்டூன் வெளியிடப்பட்டிருந்தது. ஜனாதிபதி மாளிகையில் இருந்து, ஜனாதிபதி விவி கிரி தொலைபேசியில் பேசுவது போல ஒரு பக்கமும், பிரதமர் அலுவலகத்தில் இருந்து பிரதமர் இந்திரா காந்தி அதே போன்று தொலைபேசியில் பேசிக்கொணடு இருப்பதாகவும் அந்த கேலிச் சித்திரம் வரையப்பட்டிருந்தது. வி வி கிரியும் இந்திரா காந்தியும் பேசிக் கொள்வது போன்ற சித்தரிப்பு தான் கார்ட்டூன் நோக்கம்.
    அவர்கள் என்ன பேசிக் கொண்டார்கள் என்பது குறித்த கற்பனா வசனத்தை அந்த கார்ட்டூனில் சோ குறிப்பிட்டிருந்தார். அந்த உரையாடல் இதோ:
  இந்திரா காந்தி: ஹலோ மிஸ்டர் சரி....
  வி வி கிரி: என் பெயர் சரி இல்லைங்க. கிரி. ஆனால் நீங்க என்ன சொன்னாலும் சரி.
   -இப்படித்தான் அந்த உரையாடல் வாசகம் வடிவமைக்கப்பட்டிருந்தது.
   இந்திரா காந்தி என்ன சட்டத்தைக் கொண்டு வந்தாலும், 'ஓகே' என கண்ணை மூடிக்கொண்டு கையெழுத்துப் போடும் அளவுக்கு விவி கிரி சாதகமாகவே இருந்தார். அதை உணர்த்தும் வகையில் தான் அந்த கார்ட்டூன் அச்சிடப்பட்டு,  வெளியாகி இருந்தது.

தொழிற்சங்கத்தின் தலைவர்கள் என்றால் புரட்சி முழக்கங்கள் எழுப்பியே பழக்கப்பட்டவர்கள் என்பதுதான் வரலாறு. சாத்வீக மொழியில் அரசியல் நடத்தி வந்த விவி கிரியோ, சாந்த சொரூபராக, அடங்கி ஒடுங்கிச் செயல்படும்  ஜனாதிபதியாகவே செயல்பட்டார் என்பதே வினோத வரலாறு.
  இந்த தேர்தலை அடுத்து காங்கிரஸ் கட்சி உடைந்தது. காங்கிரஸின் மூத்த தலைவர்கள் ஒருங்கிணைந்து இயக்கிய அமைப்புக்கு சிண்டிகேட் காங்கிரஸ் என்று, செய்தியாளர்கள் பெயரைக் குறிப்பிட்டு எழுதத் தொடங்கினர். ஸ்தாபன காங்கிரஸ் என்பது அதிகாரபூர்வமான கட்சிப் பெயர்.
  இந்திரா காந்தி தன் ஆதரவாளர்களை ஒருங்கிணைத்து நடத்திய கட்சியை இண்டிகேட் என்ற பெயரால் செய்தியாளர்கள் களமாடி வந்தனர்.
    அந்த கால கட்டத்தில், தமிழகத்தில் எந்த காங்கிரஸ் தலைவரைப் பார்த்தாலும் செய்தியாளர்களாகிய நாங்கள் கட்டாயம் ஒரு கேள்வியை வழக்கமாக்கி வைத்திருந்தோம்.
ஒரு முறை சின்ன அண்ணாமலை எங்களிடம் சிக்கிக் கொண்டார்.
அவரிடமும் இதே கேள்வியைத்தான் கேட்டேன்.
  அவரின் பதில் எங்களுக்குத் தெளிவைத் தரவில்லை.  குழப்பத்தான் வைத்தது. அது இதோ:
   நிருபர்: சார் நீங்கள் சின்டிகேட்டா...
இன்டிகேட்டா?
  சின்ன அண்ணாமலை: அதுதான் எனக்கு டெலிகேட் ஆக இருக்கிறது.
    அப்போதைய காலகட்டத்தில் காங்கிரசார் இப்படித்தான் குழப்பமான நிலையில் இருந்து வந்தார்கள்.
    பிரம்மானந்த ரெட்டி தலைமையில் சிண்டிகேட் காங்கிரஸ், அரசியல் நடத்தியது. ஸ்தாபன காங்கிரஸ் என்று அதற்குப் பெயரிடப்பட்டது. காமராஜர் அந்த கட்சியின் முக்கியத் தலைவராக தேசிய அளவில் அறியப்பட்டார். 
   இந்திரா காந்தி  இன்டிகேட் காங்கிரசை வழி நடத்தினார். ஒரு காலகட்டத்திற்குப் பிறகு அந்தக் கட்சியை இந்திரா காங்கிரஸ் என்று செய்தியாளர்கள் குறிப்பிடத் தொடங்கினர். தேர்தல் கமிஷனில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி (ஆர்) என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டு அங்கீகாரமும் பெறப்பட்டது.
   அப்போதெல்லாம் டி என் சேஷன் தேர்தல் கமிஷனின் பொறுப்பில் இல்லை. எனவே இந்திரா காந்தி நினைத்ததை முடித்துக் காட்ட முடிந்தது.
 அந்த சூழலில் சென்னைக்கு வந்திருந்த சிண்டிகேட் காங்கிரஸ் தலைவர் பிரம்மானந்த ரெட்டி, சின்ன மலை அருகே இருந்த திருமண மண்டபத்தில் கட்சியின் முக்கிய பிரபலங்களோடு ஆலோசனை நடத்தினார்.
அந்தக் கூட்டத்தில் அடியேனும் ரகசியமாகப் பங்கேற்றுச் செய்தி எழுதியிருக்கிறேன்.
    வி வி கிரி பற்றிய அரசியல் பின்னணிகள் இங்கே அலசப்படுவதற்குக் காரணம் உண்டு. ஜனாதிபதி பதவியை நிறைவு செய்து முடித்தவராக விவி கிரி ஓய்வு பெற்று, சில ஆண்டு காலம் வாழ்ந்து வந்தார். வயது மூப்பு மற்றும் உடல் தடிப்புக் காரணமான அவர்  1980 ஜுன் 23-ல் சென்னையில் மரணம் அடைந்தார். அவரின் வீடு தி. நகர் ஜி என் செட்டி சாலையில் உள்ள கிரி தெருவில் தான். அங்கு தான் அவரின் உடல் கிடத்தப்பட்டு இருந்தது. இறுதிச் சடங்குகள் சென்னையில் தான நடைபெற்றன.
  வி வி கிரி உடலை நல்லடக்கம் செய்யும் சுடுகாட்டு மையத்தில் ஏராளமான விவிஐபிக்கள் குழுமி இருந்தனர். முப்படைத் தளபதிகளும் அவர்களில் அடக்கம்.  அவர்களோடு செய்தியாளர் என்ற வகையில் அடியேனும் இருந்தவனாகச் செய்திகளைத் தொகுத்து எழுதினேன். 
    ஜனாதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற ஒருவரின் இறுதிச் சடங்கின் போது மத்திய அரசாங்கம் எத்தகைய சடங்குகளை எல்லாம் செய்யும் என்பதை நான் அப்போதுதான் நேரடியாகக் கண்டு, தெளிவு பெற்றேன்.
    வி வி கிரியின் இறுதிச் சடங்குகள் தொடர்பான அறிவிப்பு வெளியானதும் அதன் முழு பொறுப்பையும் தேசிய அரசாங்கத்தின் விதிமுறைப்படி, ராணுவம் ஏற்றுக் கொண்டது.  
   விவி கிரியின் உடல் இறுதிப் பயணத்திற்குத் தயாரான நிலையில்
 பிவி கிரியின் வீட்டுக்கே சென்று இறுதி அஞ்சலி செலுத்தலாம் என்ற எண்ணத்தோடு தன் காரில் அண்ணா அறிவாலயத்தில் இருந்து கருணாநிதி கிளம்பிச் சென்றார். அண்ணா மேம்பாலம் அருகே ஏராளமான கூட்டம் குழுமி இருந்தது. இதனால் வாகனங்கள் நகர முடியாத அளவுக்கான ஜன நெரிசல் காணப்பட்டது. 
  சடங்குக்கான நேரமோ நெருங்குகிறது. வாகனத்துக்கோ வழி இல்லை .
என்ன செய்வது என்று சில நிமிடங்கள் யோசித்த கருணாநிதி, காரை விட்டுச் சாலையில் இறங்கினார்.  கிரி தெருவை நோக்கி நடக்கத் தொடங்கினார். 
    இதே நேரத்தில் முதலமைச்சர் எம்ஜிஆரின் கார், அண்ணா மேம்பாலம் அருகே வந்தது. குதிரை வீரன் சிலை இருக்குமிடம் வரையிலும் வந்த அவரின் கார், திரள் கூட்டம் காரணமாக  நகர முடியாமல் நின்றது . 
      ஆகவேதான் ஒருபுறம் எதிர்க் கட்சித் தலைவர் கருணாநிதியின் காரும், மறு புறம் முதல் அமைச்சர் எம்ஜிஆரின் காரும் தடுத்து நிறுத்தப்பட்டு விட்டன.
காரில் அமர்ந்திருந்த எம்ஜிஆர் என்ன செய்வது என்று யோசிக்கத் தொடங்கினார். அதற்குள் காவல்துறை அதிகாரிகளின் உரிய முன்னெடுப்புகளுக்குப் பிறகு, முதலமைச்சரின் கார் அந்த வழியில் செல்ல அனுமதிக்கப்பட்டது.
   அந்த கார் புறப்படுவதற்கு முன்னதாகவே, காரில் அமர்ந்தபடியே இருந்த அவரின் பார்வையில் கருணாநிதி பட்டுவிட்டார்.     கலைஞர் சாலையில் நடந்து போவதைப் பார்த்ததும், எம்ஜிஆர் புரிந்து கொண்டார்.
   உடனே காரை விட்டு இறங்கிய எம்ஜிஆர், வேகமாகச் சென்று, கருணாநிதியைப் பிடித்து விட்டார். விரிந்து பரந்த அந்த மையச் சாலையில், வாகன நடமாட்டம் ஏதும் இல்லாத நிலையில், இருவர் மட்டும் சந்தித்துக் கொண்டு, பழைய கால நிகழ்ச்சிகளைச் சிந்தித்துக் கொண்டனர்.
  பின்னர் கருணாநிதியை அழைத்துக் கொண்டு, தன் கார் வரை வந்த எம்ஜிஆர், 
அவரையும் தன் காரில் ஏற்றிக்கொண்டு நேரே கிரி தெருவுக்குப் புறப்பட்டு விட்டார்.
 களத்துக்கு வந்து நின்ற காரில் இருந்து  எம்ஜியாரும், கருணாநிதியும் ஒரு சேர இறங்கி வந்ததைக் கண்டு அங்கு குழுமி இருந்தோர் வியப்பால் விக்கித்துப் போயினர். அத்தகு மாந்தர்களுள் அடியேனும் ஒருவன் என்பதுதான் என் இதழியல் அனுபவத்தின் மற்றொரு ருசிகரச் சிகரம்.
    அரசியல் மார்ச்சரியங்கள் ஆயிரம் இருந்தாலும், தனிப்பட்ட முறையில் பரஸ்பரம் பாசப் பரிவர்த்தனை செய்து கொண்ட அந்த நேச நெருக்க நெஞ்சினர், நாட்டு நாயகர்களாய் அரசியல் அரங்கின் நினைவுகளில் நிழலாடுகின்றனர்.
   எம்ஜிஆரின் பிறந்த நாளை ஒட்டிய திருவிழாக் கோலத்தின் ஒரு கட்டமாக, நேரடியாக  அடியேன் அனுபவித்த இந்த காட்சியை ஆவணப்படுத்தி இருக்கிறேன்.
   வெட்ட வெளிச் சாலையில் எம்ஜிஆரும் கருணாநிதியும் சந்தித்துக் கொண்டது என்பது அரசியல் களத்தின் ஆக்கபூர்வ அம்சமாகும். இதனை நிரூபிப்பதற்கு, வரலாறு ஒரு வேலையைச் செய்து விட்டது. 
  வி வி கிரியின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ளச் சென்ற எம்ஜிஆரும், கருணாநிதியும் மக்கள் கூட்டம் காரணமாகத் தடுத்து நிறுத்தப்பட்டது போன்றே, மற்றொருவரும் இதே நிலைக்கு இலக்கானார். அவர் பெயர் ராஜேந்திரன். தினகரன் நாளிதழின் தலைமைப் புகைப்பட நிபுணர். கிரி தெருவை  நோக்கி அவர் ஆட்டோவில் சென்று கொண்டிருந்த போது, அவரின் வாகனமும் மறித்து நிறுத்தப்பட்டது. சாலையில் இறங்கி ஓடிச் சென்று விடலாம் என்று கேமரா சகிதம் ராஜேந்திரன் அங்கு இறங்கிய போது தான் எம்ஜிஆரும் கருணாநிதியும் சாலையின் நடுவே சந்தித்துக் கொண்ட காட்சியைப் பார்த்தார். அவர் மின்னல் வேகத்தில் பாய்ந்தோடிய போது,  இரு ஆளுமைகளும் எம்ஜிஆர் காரில், பின் சீடடில் ஏறிவிட்டனர்.  
  அப்போது முன்சீட்டில் கடுகடுத்த முகத்தோடு நெடுஞ்செழியன் அமர்ந்திருந்தார். இந்த காட்சியை ராஜேந்திரன் கிளிக் செய்து விட்டார்.
   தினகரன் நாளிதழில் மறுநாள் மிகப் பெரிதாக அந்த படம் எக்ஸ்க்ளூசிவ் என்ற தகுதியோடு பிரசுரம் ஆனது.
   தினகரன் நாளிதழின் வெள்ளிவிழாச் சிறப்பு மலரில் இந்த படமும் இடம் பெற்று இருக்கிறது.
இந்த சிறப்பு மலர் தற்போது அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் கருவூலத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கிறது.  
      ஆர்வமிருப்போர் அண்டிச் சென்று, கண்டு மகிழலாம். 

ஆர் நூருல்லா 
செய்தியாளன்

 ரஜினியின் பெயரில் படமா?
வரிச் சலுகை கிடையாது
அரசாங்கத்தின் அதிரடி
--------------
நடிகர் ரஜினிக்கு இணக்கமாகவும், நெருக்கமாகவும் இருந்தவர் டைரக்டர் நடராஜ். அவரை இயக்குனராகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் தான் “அன்புள்ள ரஜினிகாந்த்”.
  அந்தப் படத்தை எடுத்த முடித்த கையோடு அழைத்துக் கொண்டு பணக்குழுவினர் செய்தித் துறை அமைச்சர் ஆர் எம் வீரப்பனை சந்தித்தனர்.
 எங்களுக்காக எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு அரசாங்கம் வலுச்சாமி தர வேண்டும் என்று அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
  இந்த கேட்பு மேல் மட்டம் வரை கொண்டு செல்லப்பட்டது. “படத்தின் பெயரில் உள்ள ரஜினிகாந்த் பெயரை அகற்றி விட்டால்தான் வரிச்சலுகைக்கான ஆணை பிறப்பிக்க முடியும்” என்று தமிழக அரசு முடிவு செய்துவிட்டது.
  “என்ன செய்வது?” என்று ரஜினிகாந்திடம் ஆலோசனை செய்யப்பட்டது.
"வரிச்சலுகை கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. படத்தின் பெயரிலிருந்து என் பெயரை நீக்குவதை ஏற்க முடியாது."
 என்று ரஜினிகாந்த் திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டார். எனவே அந்தப் படத்திற்கு வரிச்சலுகை வழங்கப்படவில்லை.

ஆர் நூருல்லா   செய்தியாளன்
9655578786

கருணாநிதி வீட்டுக்கூரை சூரை
கலங்கிப் போன கலைஞர்
-----
  தஞ்சைத் தரணி வாழ் மக்களுக்குக் கூரைக் கொட்டகையில் ஓய்வு எடுப்பது என்றால் குஷியோ குஷி. அழகு மிகு அலங்காரத்தோடு வீடு இருந்தாலும், அதன் மொட்டை மாடியில் கூரை போட்டு, அதில் குந்தி அமர்ந்து குதூகலிப்பது என்பதில் தஞ்சை மக்களுக்குத் தணியாத ஆசை.
  கூரைக்குக் கீழ் அமர்ந்து கதை எழுதுவது என்பது கருணாநிதிக்கு மிகவும் பிடித்துப் போன சூழல்.
தஞ்சையைத் துறந்தாலும் தணியுமா வேட்கை?
தன் கோபாலபுரம் வீட்டு மொட்டை மாடியில் கூரையைப் போட வைத்தார் கருணாநிதி. கீற்றுக் கொட்டகைக்குள் அமர்ந்தால் ஆற்றொழுக்கு என ஊற்றெடுக்கும் கற்பனை என்பது கருணாநிதியின் எண்ணம் போலும்.
கீற்றுகளால் வேயப்பட்ட கூரைக்குள் அமர்ந்து ஓய்வு எடுப்பதில் கருணாநிதிக்குத் தனி சுகம் உண்டு. அடிக்கடி அவர் அத்தகைய  மகிழ்ச்சியில் திளைத்ததுண்டு
  தஞ்சையில் உள்ள அரசு விருதுநகர் மாளிகையில் கருணாநிதியின் விருப்பத்திற்கு ஏற்ற வகையில், ஒரு கூரை இருந்தது. கருணாநிதி தஞ்சைக்குச் செல்லும் பொழுதெல்லாம் அந்தக் கூரையில் ஓய்வு எடுப்பது வழக்கம். 
   கூரை வேயப்பட்ட அறையில் ஓய்வு எடுப்பது என்பது மூப்பனாருக்கும் பிடித்தமான பழக்கமாகும். அவரும் புஞ்சையும், நஞ்சையும் பூத்துக் குலுங்கும் தஞ்சைக்காரர் தானே!
 கருணாநிதியின் வீட்டுக் கூரைக் கீற்றுகள் ஒரு நாள் காற்றில் பறந்த காட்சிதான் கருணாநிதியைக் கலங்க வைத்தது. ஊற்றெடுக்கும் ஆற்றலின் தோற்றத்திற்கு அடித்தளம் அமைத்த கூரைக் கீற்றுகள் குலைந்து போயினவே என்பது அவரின் கவலை. இது ஒரு விசித்திரப் பிசகல்.
    அந்த  களத்தில் அரசியல் அஸ்திரம் ஒன்றை வாழப்பாடி ராமமூர்த்தி ஏவினார். ஆனால் அதுவே பூமராங் ஆகி அவரையே புலம்ப வைத்து விட்டது. 
  அது இதோ:
   கும்பகோணத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில் மொட்டை மாடியில் கூரைக் கொட்டகை போடப்பட்டிருந்தது. அதில் தான் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. 2004-ல் திடீரென்று அந்த கூரையில் தீப்பிடித்தது. 94 மாணவ- மாணவியர் தீ விபத்தில் கருகிச் செத்தனர்.  
   அவர்களின் படங்களை வைத்து ஆண்டுதோறும் பொதுமக்கள் அஞ்சலி நடத்தும் அளவுக்கு அந்த நகரில் கடும் துக்கத் தாக்கம் அடர்த்தெழுந்து தொடர்ந்து கொண்டே இருக்கிறது. விபத்துச் செய்தி வெளியான காலகட்டத்தில் தமிழகமே தகிக்கும் அளவுக்கு, மக்கள் கொந்தளித்துப் போயினர்.
  இது தொடர்பான விசாரணையின் போது, "கீற்று கொட்டகை தான் தீப்பற்றக் கூடிய நிலையில் இருந்தது. ஆகவே தான் தீ விபத்து ஏற்பட்டது. இனி எந்த  பள்ளிக்கூடத்திலும் கூரைக் கொட்டகையின் கீழ் வகுப்பு நடத்தக்கூடாது" என்று பரிந்துரை செய்யப்பட்டது.
   அந்த காலகட்டத்தில் அவ்வாறு தமிழகம் முழுவதும் உள்ள கூரைக் கொட்டகைகள் கிழித்து எறியப்பட்டன. தென்னை, பனை ஓலைகள் வேய்ந்த கூரைகளைக் கண்டாலே பிஞ்சு நெஞ்சங்கள் அஞ்சி ஒடுங்கும் அளவுக்கு அந்த காலச் சூழல் அமைந்திருந்தது.
    அப்போதுதான் கூரை அரசியலை வாழப்பாடி ராமமூர்த்தி அக்கினித் திராவகமாய் அதிரடியாக ஆரம்பித்து வைத்தார். “கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி வீட்டின் மொட்டை மாடியில் கீற்றுக் கொட்டகை போடப்பட்டுள்ளது. அதில் அமர்ந்து தான் கருணாநிதி ஆழமான அரசியல் ஆலோசனைகளை அலசி வருகிறார். அந்த கூரை காரணமாக கருணாநிதியின் உயிருக்கே கூட ஆபத்து இருக்கிறது. எனவே அதனையும் பிரித்து எறிய வேண்டும்" என்று அனல் வீச்சுக் கருத்தைக் கனல் தெறிக்க வீசினார் வாழப்பாடி ராமமூர்த்தி.
  " வாழப்பாடி எழுப்பிய சொல்வீச்சு வாய்ப் போருக்கு உடனடி பலன் கிடைத்து விட்டது.  கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி வீட்டின் மொட்டை மாடியில் திடீரென்று கீற்றுக் கொட்டகை காணாமல் போயிற்று. கருணாநிதியுடனான அரசியலில் நின்று வென்றதாக வாழப்பாடி மகிழ்ந்து கிடந்தார். 
ஆனால், கூரை அரசியலைப் பொறுத்தவரை, வாழப்பாடியின் மாற்று அரசியல் தோற்றுப் போனது. அவர் வீசிய வாய்ச்சொல் வாள் பூமராங் ஆகி, அவரையே தாக்கி விட்டது. 
   எப்படி தெரியுமா?
  கருணாநிதியைப் பொறுத்த வரை ஜெயலலிதாவுக்கு எதிராக நேரடி அரசியல் நடத்துவதை விட, வாழப்பாடி ராமமூர்த்தி உடன் மோதுவதைப் பெருமையாகவும், கௌரவமாகவும் கருதி வந்தார். அதற்கான காரணம் அவருக்கே வெளிச்சம்.
     வாழப்பாடி ராமமூர்த்தியின் கூரை அரசியலுக்குப் பதிலடி கொடுக்க, அட்டகாச அறிக்கை ஒன்றை அவசரமாக வெளியிட்டார்
  "கீற்றுக் கொட்டகைகளை மாற்றிக் கொண்டிருக்கும் காலமிது. தீ விபத்து  அபாயத்தைச் சுமந்து கொண்டு நின்றிருக்கும் கூரைகளைப் பிரித்து எறிய வேண்டும் என்ற முடிவு அரசு மூலம் எடுத்தாகிவிட்டது. ஆனால் வாழப்பாடி ராமமூர்த்தியோ தன் வீட்டுக்கு முன்னால் கீற்றுக் கொடடகை போட்டு, ஒரு அபாயகரமான சூழலை உண்டாக்கி இருக்கிறார்.  அவரைச் சந்திக்க வருவோருக்கு ஆபத்தாக அந்தக் கூரை அமைந்திருக்கிறது. ஆகவே அதனையும் அகற்ற வேண்டும்" என்று கருணாநிதி சுடச்சுட அறிக்கை வெளியிட்டார்.  
அந்த செய்தியானது அரசியல் அரங்கில் நெருப்பைப் பரப்பியது.
  அன்று காலையே பத்திரிக்கையாளர்கள்  வாழப்பாடி ராமமூர்த்தியைச் சந்தித்துப் பேசினோம். கருணாநிதியின் குற்றச்சாட்டையும், கீற்றுக் கூற்றையும் பற்றி வினாக் கணை தொடுத்தோம். 
   கேட்டதும் கொந்தளித்துப் போவார், கொதித்துப் பேசுவார் என்று வாழப்பாடி ராமமூர்த்தி பற்றி எண்ணியிருந்தோம். ஆனால் அவரோ, அந்த விவகாரத்தைப் போகிற போக்கில் எளிதாக, மயிலிறகு வருடுதல் போல் கையாண்டு விட்டார்.
  " என் வீட்டின் முன் கூரை போடப்பட்டிருப்பது பற்றி கருணாநிதி கவலைப்பட்டு இருக்கிறார். என்னைச் சந்திக்க வருவோர் வெயிலில் காய்கிறார்களே, சூட்டில் பொசுங்குகிறார்களே என்ற எண்ணத்தோடு தான் கூரை  போட்டு இருக்கிறேன். அது பிடிக்கவில்லை என்று கருணாநிதி கூறுவாரானால், அதற்கு ஒரு முன் உதாரணமாக கும்பகோணம் தீ விபத்தை அவர் பேசுவாரானால்,  எனக்கொன்றும் ஆட்சேபனை இல்லை. எப்போது வேண்டுமானாலும் அந்த கூரையைப் பிரித்து விடலாம்" என்று வாழப்பாடி ராமமூர்த்தி விளக்கம் அளித்தார்.
  அவர் அத்தோடு நின்று விடவில்லை. அதிலும் ஒரு அரசியல் சூடு வைத்தார். "என்னைச் சந்திக்க வீட்டுக்கு வருகின்றவர்கள் வெயிலில் வாட வேண்டும், வெம்பி வேக வேண்டும் என்று கருணாநிதி விரும்புகிறார் என்றால், நான் என்ன செய்ய முடியும்? " இப்படி ராமமூர்த்தி பொடி வைத்துப் பேசியது, அரசியலில் வெடி வைத்து ஏசியது போல் இருந்தது.
 வாழப்பாடியாரின் வீட்டுக்கு எதிரே இருந்த அந்த பந்தலும் பிரிக்கப்பட்டது.  அவர் கருணாநிதியை நோக்கி வீசிய வாள், பூமராங் ஆக மாறி, அவரையே தாக்கியது தான் ஆச்சரியகரமான அரசியல்.

-ஆர் நூருல்லா செய்தியாளன்
9655578786

Comments

Popular posts from this blog

முன்னாள் ராணுவ வீரர்கள் குறை தீர்க்கும் கூட்டம்

வீட்டு வசதி வாரிய செயலாளருக்கு பாராட்டு

கோரிக்கை