அரசு டவுன் பஸ்சில் தீ
ஆற்காடு அருகே அரசு டவுன் பஸ் தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் 56 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மேலும் தீ பரவாமல் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் இருந்து எசையனூருக்கு தடம் எண் 37 என்ற மகளிர் விடியல் பயணம் டவுன் பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ்சில் 56 பயணிகள் பயணம் செய்தனர். பஸ் சக்கரமல்லூர் அண்ணா நகர் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென எஞ்சின் பகுதியில் இருந்து திடீரென புகை வந்தது. இதனை கவனித்த டிரைவர் உடனடியாக பஸ்சை நிறுத்தினார். பின்னர் பஸ்ஸில் இருந்த 56 பயணிகளையும் உடனே கீழே இறங்குமாறு அறிவுறுத்தினார். அதன்பேரில் பயணிகள் அனைவரும் அவசரகதியில் கீழே இறங்கினர் அடுத்த சில நொடிகளில் என்ஜின் முன்பகுதியில் தீ பிடித்து எரியத் தொடங்கியது. இது குறித்து ஆற்காடு தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர் தீ விபத்துக்குள்ளான அரசு பஸ்சின் ஆயுட்காலம் இன்னும் ஒரு மாதம் மட்டுமே இருப்பதாக போக்குவரத்து அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அரசு பஸ் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பயணிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியது
Comments
Post a Comment